வாழ்வியல் இலக்கியப் பொழில்
Life Literary Association

தாமின் புறுவது உலகின் புறக்கண்டு
காமுறுவர் கற்றறிந் தார்.
                                     (அதிகாரம்:கல்வி குறள் எண்:399)

தமிழர் விளையாட்டுகள்

          மொழி, இலக்கியம், கலை, விளையாட்டு போன்ற பலவற்றின் ஒருங்கிணைந்த வளர்ச்சிதான் ஒரு சமுதாயத்தின் நாகரிகம், பண்பாடு, ஆகியவற்றின் வளர்ச்சி. இதில் ஒன்றின் வளர்ச்சி குறைவுபட்டாலும் அப்பண்பாடு முழுமை பெற்றதாகாது. ஒரு சமுதாயத்தின் நாகரிகம், பண்பாடு ஆகியவற்றின் பரிணாம வளர்ச்சியுடன் இயைந்தது அச்சமுதாயத்தின் விளையாட்டுகள்.

          விளையாட்டுகளை வெறும் பொழுது போக்கு என்று கருத இயலாது. இவை பொழுது போக்கிற்காக மட்டுமின்றி உடல்நலம், மனநலம் முதலியவற்றைப் போற்றிப் பேணுபவை என்பதை எல்லாச் சமுதாய அமைப்பிலும் நாம் காணலாம். ஓர் இனம் எவ்வாறு தன் மொழியைக் கண்போல் போற்றிப் பாதுகாக்க வேண்டுமோ அதே போன்று தத்தம் விளையாட்டுகளையும் போற்றிப் பேணவேண்டும்.

          உடம்பை வளர்த்தேன்; உயிர் வளர்த்தேனே - என்பது திருமூலர் வாக்கு. ஆரோக்கியமாக இருந்தால்தான் உயிர் உறுதியாக இருக்க முடியும். சிறு குழந்தை கை, கால்களை உதைத்துக் கொள்ளும் போதே உடல் ஆரோக்கியத்திற்கான விளையாட்டுகளை ஆடத் தொடங்குகின்றன. நமது தமிழகத்து விளையாட்டுகளை அறு வகையாகப் பிரிக்கலாம்.

1. ஆடவர் விளையாட்டு:
          இதில் சல்லிக்கட்டு, சிலம்பம், சடுகுடு, இளவட்டக்கல், உறிப்பானை உடைத்தல், இரட்டைமாட்டுப் பந்தயம் போன்றவைகள் அடங்கும். இதில் ஆண்மகனின் வீரம் வெளிப்படும். அன்றைய சடுகுடு இன்றைய கபடி ஆட்டமாக சர்வதேச அளவில் விளையாடப்படுகிறது.

2. மகளிர் விளையாட்டு:
          இதில் தாயம், பல்லாங்குழி, தட்டாங்கள், பரமபதம் போன்றவை அடங்கும். நமது மகளிர் வெளியில் சென்று விளையாட முடியாது. இது நமது பண்பாட்டுப் பழக்கம். எனவே அவர்கள் அக விளையாட்டு விளையாடுவர். ஆடவர்கள் ஆண்மைய வெளிப்படுத்தும் விளையாட்டை வீட்டின் வெளியே விளையாடுவார்கள். அது புற விளையாட்டு எனப்படும்.

3. சிறுவர் சிறுமியர் விளையாட்டு:
          இதில் குலகுலையாய் முந்திரிக்காய், நொண்டி, தொட்டுவிளையாடுதல், கண்ணாமூச்சி போன்றவை அடங்கும். பாலியல் உணர்வு, அரும்பாத அந்தப் பருவத்தில் ஒருவரோடு ஒருவர் அன்போடு பழகி பாசமாகவும், நேசமாகவும் சேர்ந்து விளையாடும் விளையாட்டு.

4. சிறுவர் விளையாட்டு:
          இதில் பச்சைக்குதிரை, மரங்கொத்தி, கிட்டிப்புள், பிள்ளையார் பந்து, எறிபந்து, பட்டம் விடுதல், கோலி விளையாட்டு என்று பலவகை உண்டு. விளையாட்டுகளில் பெண் பிள்ளைகளைச் சேர்க்க மாட்டார்கள். நமது பிள்ளையார் பந்துக்கும் தற்போதைய கிரிக்கெட்டுக்கும் தொடர்பு இருப்பது போல் தோன்றும்.

5. சிறுமியர் விளையாட்டு:
          இதில் கண்கட்டி விளையாடுதல் மச்சுமேலயாரு, கும்மி, கோலாட்டம், மணல் வீடு கட்டுதல் போன்றவை அடங்கும். சிறுமியரின் இந்த ஆட்டங்களைப் பார்த்தால் எந்த நாட்டுக்காரனும் பரவசமடைவான். இதில் உள்ள அழகு நளினம் குழுவினர் ஒற்றுமை பார்ப்போரைப் பரவசப்படுத்தும்.

6. குழந்தை விளையாட்டு:
          இதில் பருப்பு கடைந்து, உபசரிப்பு விளையாட்டு, தென்னைமரத்து விளையாட்டு போன்றவை அடங்கும். நமது விளையாட்டுகள் உடல் திறனையும் உள்ள வலிமையையும் மட்டும் வெளிப்படுத்துவதில்லை. நமது பண்பாட்ட்டையும் வெளிப்படுத்துவதில் உன்னதமானவை. ஒரு பெண் நடுவே உட்கார்ந்து கொண்டு தன்னைச் சுற்றி சிறு குழந்தைகளை உட்காரவைத்து புறங்கை வெளியே தெரியும்படி உட்கார் வைப்பாள். ஒவ்வொரு விரலாகத் தொட்டு அரிசி வாங்கி புளி வாங்கி என்று சொல்லி உள்ளங்கையினைத் திருப்பி பருப்பு கடைந்து என்றுக் கூறி கொண்டே தன் உக்குமுழங்கையால் தடவுவாள்.
           பின்னர் காக்காவுக்கும் போட்டு, அம்மாவுக்கும் கொடுத்து ஊரில் உள்ள அத்தைக்கும் கொடுத்து உனக்குக் கொஞ்சம் எனக்குக் கொஞ்சம் என்று சொல்லிவிட்டு குழந்தையின் உள்ளங்கையிலிருந்து ஆரம்பித்து நண்டு ஊருது நரி ஊருது என்று சொல்லிக்கொண்டே குழந்தையின் அக்குள் வரை தடவிச் செல்வாள். குழந்தை கூச்சத்தால் சிரிக்கும். முதலில் சமைத்த உணவைக் காக்கைக்குப் போட வேண்டும், பின்னர் எல்லோருக்கும் பகிர்ந்து உண்ண வேண்டும், எல்லோருக்கும் கொடுத்துவிட்டு நீ உண்ண வேண்டும். பிறருக்குக் கொடுத்துவிட்டு வருத்தப்படாமல் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்ற பண்பாட்டைச் சிறு குழந்தை முதலேக் கற்றுக் கொடுக்கும் உயர்ந்த பண்பாடு நம் விளையாட்டிலும் உண்டு.
          தமிழகத்து விளையாட்டுகள் உடலை, உள்ளத்தை, ஆற்றலை விளையாட்டாக வளர்த்துவிடும் உயரிய கலை. இதனை நாம் மறந்து விட்டால் நாம் நம்முடைய பண்பாட்டை இழந்துவிடுவோம். விளையாட்டுகள் நம்முடைய வாழ்வின் ஒரு அங்கமாகத் திகழ்ந்தவை. நல்ல விளையாட்டு வீரன் கட்டுப்பாடு உள்ளவனாக இருப்பான். ஏனென்றால், கட்டுப்பாட்டோடு விளையாடிப் பழகினவன். எனவே, ஆடுவோம், பாடுவோம் உடல் ஆரோக்கியமாக வாழ்வோம்.

தமிழ் சான்றோர்கள்

                                                

சிங்கப்பூர் தமிழ்ச் சான்றோர்கள்

                       
events

➤➤ இலக்கியச் சந்திப்பு - ஜனவரி 2024
அடுத்த நிகழ்வு (75ஆவது சந்திப்பு):
நாள்: 13-01-2024
நேரம்: பகல் 5.00 மணிக்கு
இடம்: பொங்கோல் சமூக மன்றம்


1 / 10
2 / 10
3/ 10
4 / 10
5/ 10
6/ 10
7/ 10
8 / 10
9/ 10
10/ 10

மூதுரை

வெண்பா :6

உற்ற இடத்தில் உயிர் வழங்கும் தன்மையோர்
பற்றலரைக் கண்டால் பணிவரோ? கல் தூண்
பிளந்து இறுவது அல்லால் பெரும்பாரம் தாங்கின்
தளர்ந்து வளையுமோ தான்

விளக்கம்:

தூண் ஓரளவுக்கு மேல் பாரத்தை ஏற்றினால் உடைந்து விழுந்து விடுமேயல்லாது, வளைந்து போகாது. அது போலவே மானக்குறைவு ஏற்பட்டால் உயிரை விட்டு விடும் தன்மையுள்ளவர்கள் எதிரிகளைக் கண்டால் பணிவதில்லை.